உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார், வேன்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக, ஒப்பந்த பணியார்கள் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் அத்துமீறுவது, அவதுறான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

இதனால் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சிகப்பு நிற சுடிதார், சிகப்பு நிற வேஷ்டி, டி-சர்ட் அணிந்த தம்பதியினர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது கோயில் பணியாளர்களுக்கும் அந்த தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த இரு தற்காலிக பணியாளர்கள், அவர்களை நாகூசும் தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளனர். தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த தூய்மைப் பணியாளர்கள் திருக்கோயில் தற்காலிக பணியாளர்களுடன் சேர்ந்து சுடிதார் அணிந்து வந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த கணவனுக்கு அடி உதை விழுந்தது. இதனை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே திருக்கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை தாக்கியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருக்கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செயல் அலுவலரான வள்ளிநாயகம், “கோயில் வளாகத்தில் சிலர் சாமியாடி பக்தர்களிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அந்த தம்பதிகள் சாமியாடி பக்தர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். இதற்காக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தும் போது அந்த பெண், கோயில் பணியாளரை தாக்கியுள்ளார். அதன் பிறகே அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் தம்பதியினரை தாக்கியுள்ளனர்” என்றார்.