குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் – 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

Spread the love

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா  மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன.  பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. 

ஹெலிபேட் அமைக்கும் பணிகள்

தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திற்காக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். அதனைத் தொடர்ந்து கையப்படுத்தப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி கருங்கற்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது வேலிகள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. அந்த கருங்கல் கட்டடத்தின் மேல் இரும்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக அலுவலக கட்டடப் பணிகள், ராக்கெட் லாஞ்ச் சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லாஞ்ச் காம்ப்ளக்ஸ், ராக்கெட் லாஞ்சிங் பேட் போன்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் வகையில் ஹெலிபேட் தளங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

ராக்கெட் ஏவுதள அலுவலக கட்டடம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியார் ராக்கெட் விண்ணில் ஏவும் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், ”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *