குழந்தை பெற்றோருக்கு ஜாக்பாட்! ரூ.52 லட்சம் வரை வழங்கும் அரசு! எந்த ஊரில் தெரியுமா?  – Kumudam

Spread the love

சிங்கப்பூரில் தேசிய தின பேரணியில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் 17 வயது வரை கிட்டத்தட்ட 70,000 சிங்கப்பூர் டாலர் வரை நேரடி நிதியுதவி கிடைக்கும் வகையில் புதிய சலுகைகளை அறிவித்தார். இதில் குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படும் 10,000 சிங்கப்பூர் டாலர் “Baby Gift”, ஆண்டுதோறும் வழங்கப்படும் குழந்தை நலக் கிரெடிட்கள், கூடுதல் மானியங்கள் மற்றும் பெற்றோர் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், முழுநாள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கான மானியங்கள் அதிகரிக்கப்படுவதுடன், அரசு வீடுகளுக்கான விண்ணப்பங்களில் குழந்தைகள் உள்ள அல்லது குழந்தையை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு கூடுதல் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு 0.87 ஆகக் குறைந்தது. இதனால், முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் எதிர்கால தொழிலாளர் பற்றாக்குறை குறித்து அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

ஆனால், பொருளாதார உதவிகள் மட்டுமே இளைஞர்களை குழந்தை பெற்றுக்கொள்ளத் தூண்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதிகரித்து வரும் கல்விச் செலவுகள், வேலை அழுத்தம், வாழ்க்கைத் தரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை இளம் தலைமுறையினர் பெற்றோராகும் முடிவைத் தள்ளிப்போடுவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதனிடையே, குழந்தை வளர்ப்பை விரும்பும் குடும்பங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், அதே நேரத்தில் சிங்கப்பூர் தனது தொழிலாளர் தேவையை சமாளிக்க குடியேற்றத்தையும் தொடர்ந்து வரவேற்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நிதிச் சலுகைகளை சிங்கப்பூர் அரசு வழங்கி வந்தாலும், பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *