`கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்' – நெருக்கும் மாணவர்கள்; ஜார்க்கண்ட் முதல்வருக்கு ராகுல் கடிதம்

Spread the love

ஜார்க்கண்டில் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து மாணவர்களின் குறைகளைக் கேட்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், கடந்த 24 நாட்களாக அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டங்களில் மாணவர்களின் கோரிக்கைகள் “நியாயமானவை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள அமைதியான போராட்டத்திற்கான உரிமையை காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எனவே, கல்வி அமைப்பில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவையும் அளிக்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜார்க்கண்ட் அரசு மாணவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, சில மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளை நீங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இந்த நடவடிக்கை, மாணவர்களின் மீதமுள்ள கவலையைத் தீர்ப்பதில் அரசுக்கு உள்ள உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்,” என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்களுக்கு நமது ஒற்றுமையையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், “முதல்வர் தங்களைக் கேட்கவில்லை என்றால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும்” என்று ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி தங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், “குறிப்பிட்ட நடவடிக்கைகள் எதுவும்” இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?

ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில், மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கடந்த ஜூலை 29 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14வது ஜார்க்கண்ட் பொதுப் பணி தேர்வாணைய (JPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (JSSC-CGL) தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, இந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

இந்தத் தேர்வுகளுக்கான இடங்கள், வெளி மாநிலத்தவர் உட்பட, தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மூலம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தொடர்ச்சியான முறைகேடுகளால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், தேர்வு அமைப்பின் மீதான நம்பிக்கை குறைவதாகவும் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *