கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 09.04.2026 அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஆட்சி அமைக்க 71 எம்.எல்.ஏ-க்கள் வேண்டும் என்ற நிலையில் 90-க்கும் அதிகமான சீட்டுகள் தங்களுக்கு கிடைக்கும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைப்போம் என சி.பி.எம் கூறிவருகிறது. பினராயி விஜயன் 3.0 ஆட்சி அமைப்போம் என சி.பி.எம் நம்புகிறது. “நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறாமல் இருந்தால் அரசியல் வனவாசம் செல்வேன்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் சொல்லி வருகிறார். எனவே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வர் யார் என்ற விவாதம் காங்கிரஸில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட தேர்தல் இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில், பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன.

கேரளத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை சுமார் 9 நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. டைம்ஸ் நவ் ஜே.வி.சி, பி மார்க், பீப்பிள்ஸ் பல்ஸ், வோட் வைப், ஆக்சிஸ் மை இந்தியா, சாணக்யா ஸ்ட்ராடஜீஸ், பீப்பிள் இன்சைட், ஜர்னல் மிரர் மற்றும் மேட்ரிக்ஸ் ஆகியவை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. டைம்ஸ் நவ் ஜேவிசி வெளியிட்ட கணக்கெடுப்பு முடிவுகளின்படி, சி.பி.எம் கூட்டணி 52-61 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 72-84 இடங்களையும், பா.ஜ.க கூட்டணி 03-04 இடங்களையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா கணக்கெடுப்பு முடிவுகளின்படி, சி.பி.எம் கூட்டணி 49-62 இடங்களையும் (39%), காங்கிரஸ் கூட்டணி 72-80 இடங்களையும் (44%), பா.ஜ.க கூட்டணி 00-03 இடங்களையும் (14%) வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்ரிக்ஸ் கணக்கெடுப்பின்படி, சி.பி.எம் கூட்டணி 60-65 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 70-75 இடங்களையும், பா.ஜ.க கூட்டணி 03-05 இடங்களையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.