”கேர்ஃபுல்லா இருக்கணும்”- தஞ்சாவூர் தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணனை தட்டிக் கொடுத்த முதல்வர் விஜய்!

Spread the love

தவெக அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என்று தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் சரவணன் பெயர் பலமாக அடிப்பட்டது. ரிசல்ட் வெளியான அன்றே வேளாண்மை துறை அமைச்சர் அவர்தான் என்றும் பேசப்பட்டது. ஆனால் கும்பகோணம் தொகுதியில் வென்ற வினோத் அமைச்சரவையில் இடம் பெற்று வேளாண்மைதுறை அமைச்சர் ஆனார். அமைச்சரவை பட்டியல் வெளியாவதற்கு முன்பு விஜய் சரவணன் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியானது. இதனால் அவருக்கு அமைச்சரையில் இடம் கிடைக்கும் வாய்ப்பு கை நழுவியதாகப் பேசப்பட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

விஜய் சரவணன் அமைச்சராகக் கூடாது என்று தஞ்சாவூர் திமுக-வைச் சேர்ந்த முக்க்கிய புள்ளி ஒருவர் ஆடிய ஆட்டத்தில் விக்கெட்டானார் விஜய் சரவணன் என்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே விஜய்யின் தீவிர விசுவாசியாக இருந்து அவர் அறிவித்த மக்கள் நலப்பணிகளை இப்போது வரை தொடர்பவர் விஜய் சரவணன். சமீபத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்திருக்கிறார் எம்.எல்.ஏ விஜய் சரவணன். அப்போது, “இனி ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் சரவணன், உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்” என்று சொன்னதாக தஞ்சாவூர் தவெக வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

விஜர் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், தவெக என ஒவ்வொரு கட்டத்திலும் தன் உழைப்பைக் கொடுத்த சரவணனுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்கிற ஆதங்க குரல்கள் இப்போதும் குறையவில்லை. இது குறித்து தவெக வட்டாரத்தில் விவரமறிந்த புள்ளிகள் தரப்பில் பேசினோம். “தஞ்சாவூர் கரந்தை பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார் விஜய் சரவணன். எளிய பின்னணியைக் கொண்டவர். அவர் அப்பா சாக்கு வியாபாரம் செய்தவர். விஜய் சரவணன் மனைவி ஜெயலெக்‌ஷ்மி, வேளாண்மை துறையில் விதைச்சான்று பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகன் சஞ்செய்குமார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன்

விஜய் ரசிகர் மன்றத்தில் கிளைச் செயலாளராகத் தன் பணியைத் தொடங்கியவர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். தற்போது தவெக-வின் தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கிறார். 2005-ல் 18 ஜோடிகளுக்கு 51 சீரவரிசை பொருள்களுடன் இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர், விஜய்யை அழைத்து வந்து அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்து திருமண விழாவை நடத்தினார்.

அப்போது களத்தில் காலில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழன்ற விஜய் சரவணனை உச்சி முகந்து பாராட்டினார் விஜய். 2008-ல் தஞ்சாவூர் ராஜராஜன் தியேட்டரில் நடந்த வில்லு பட விழாவில் விஜய் கையால் நலத்திட்ட உதவி வழங்கினார். ரத்ததானம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவி, மருத்துவ முகாம் உள்ளிட்ட தலைமை அறிவித்த அனைத்தையும் செயல்படுத்தியவர். குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் விலையில்லா விருந்தகம் மூலம் தினமும் 500 நபர்களுக்கு காலை உணவு வழங்குகிறார். இதை அவரது மைல்கல் என்றே சொல்லலாம். புயல், மழை, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் கூட இதை நிறுத்தியதில்லை. இதன் மூலமே பல மட்டத்திலும் கவனம் பெற்றார்.

குடும்பத்தினருடன் விஜய் சரவணன்

விஜய் முகமாக இருந்து நலத்திட்டங்களில் ஈடுபட்டு வந்ததே அவருக்கான வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து பொதுவாழ்க்கையில் சற்றும் பின் வாங்காமல் தலைமை சொன்னதை செயல்படுத்தியதன் மூலம் விஜய் மனதில் இடம் பிடித்தார். கூட்டம் ஒன்றில் இவரைப் பற்றிச் சொல்ல, அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தன் பெயருக்கும் முன்னால் என் பெயரை சேர்த்து கொண்டிருப்பதன் மூலம் இவரை தெரிந்து கொள்ளலாம் என்று விஜய் சரவணன் குறித்துப் பேசியிருக்கிறார் விஜய்.

தவெக தொடங்கப்பட்ட பிறகான கட்சிக் கூட்டங்களில் விஜய்யை பாராட்டி இவர் பேசிய மேடை பேச்சுக்கள், அரசியல் வட்டத்தில் தனி கவனம் பெற்றது. அந்தளவுக்கு பேச்சாற்றல் மிக்கவர். இவர் குறித்து வெளியான வீடியோவை காழ்ப்புணர்ச்சியில் ஒருவர் பதிவிட அதை திமுக-வினர் வைரலாக்கினர். இதனால் விஜய் சரவணன் தலையில் இடி விழும் என எதிராளிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரோ அதை சாதாரணமாக கடந்து சென்றார். சைபர் க்ரைம் மூலம் அந்த வீடியோ குறித்து விசாரிக்க அது பல ஆண்டுகளுக்கு முன்னாள் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

விஜய் சரவணன்

இதனால்தான் அமைச்சரவையில் விஜய் சரவணன் இடம் பெறவில்லை எனப் பேசுகிறார்கள். தலைமை ஒரு முடிவெடுத்தால் நிச்சயம் காரணத்துடனே இருக்கும். எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றதும், இந்த வெற்றியை தளபதிக்கு சமர்பிக்கிறேன் அவரால் இது சாத்தியமானது. ஒரு எளிய குடும்பத்து பிள்ளையை எம்.எல்.ஏ-வாக மாற்றியிருக்கிறார் என்ற விஜய் சரவணன், சமீபத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். அப்போது இனி கேர்ஃபுல்லா இருக்கணும், உங்களுக்கு நல்லது நடக்கும் என்றுள்ளார்.

நேற்று திருச்சி வந்த விஜய்யை சந்திக்கும்போது அக்கறையான வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். எனக்கு தளபதி முதல்வரின் அன்பு ஒன்றே போதும் என்கிறார் விஜய் சரவணன். ஆனால் தனக்காக உழைத்தவர்களை ஏற்றி வைத்து அழகு பார்ப்பதில் விஜய்க்கு நிகர் விஜய் தான். அந்த வகையில் தன் ஆதரவாளர்கள் மட்டுமன்றி பல மட்டத்திலும் நினைப்பது போல் விமர்சனங்களை புறம் தள்ளி விட்டு விஜய் சரவணனுக்கான வாய்ப்பை விஜய் அமைத்துக் கொடுப்பார்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *