வேலூர் மாவட்டத்திலுள்ள கீழ்வைத்தினான்குப்பம் எனும் கே.வி.குப்பம் தனித்தொகுதியில் தி.மு.க சார்பாக ராஜேஸ்வரி, அ.தி.மு.க கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தி, நா.த.க-வில் கலையேந்திரி, த.வெ.க-வில் தென்றல் குமார் களமிறங்கியுள்ளனர். கடந்த முறைபோல, மாம்பழத்தின் துணையோடு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டதால் `மீண்டும் வெற்றி’ எனக் கணக்குப் போட்டு தெம்போடு இருந்தார் ஜெகன்மூர்த்தி.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி அவருக்கு அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றில் இருந்தே த.வெ.க வேட்பாளர் தென்றல் குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

மதியம் நிலவரப்படி, 10 சுற்றுகள் முடிவிலும் த.வெ.க-வே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 10-வது சுற்று முடிவில், த.வெ.க வேட்பாளர் தென்றல் குமார் 39,666 வாக்குகள் பெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் ராஜேஸ்வரி 28,230 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நகர்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகன்மூர்த்தி 25,488 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் தோல்வியை நோக்கி நகர்வது, அவரின் ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.
த.வெ.க வேட்பாளருக்கும் ஜெகன்மூர்த்திக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 14,178. அதேசமயம், அடுத்தடுத்த சுற்றுகளிலும் வாக்கு சதவிகிதம் அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடாத காரணத்தினால் கலக்கத்தில் இருக்கிறார் ஜெகன்மூர்த்தி.