இந்த ஆலயத்தின் விசேஷம் என்னவென்றால் அது பூ வைத்துப் பார்ப்பதுதான். இந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், புதிதாக எந்த முடிவெடுத்தாலும், புதிதாக எதைத் தொடங்கினாலும் அதை இந்த வனபத்ரகாளிக்கும் முன்னால் பூ வைத்துப் பார்த்தபிறகே முடிவு செய்வார்கள்.
வரன் தேர்ந்தெடுப்பது, என்ன விதைப்பது என்று எல்லாவற்றுக்கும் இந்தக் காளிமீது பாரத்தைப் போட்டுவிட்டே முடிவு செய் கிறார்கள். சிவப்பு, வெள்ளைப் பூக்களைத் தனித்தனிப் பொட்டலங்களில் போட்டு, அவற்றை காளியின் காலடியில் போட்டு ஒன்றை எடுப்பார்கள்.
நாம் எந்தப் பூவை மனதில் நினைத்தோமோ அந்தப் பூ வந்துவிட்டால் காளி உத்தரவு தந்துவிட்டதாக நம்புகிறார்கள். அந்த உத்தரவை அவர்கள் மீறுவதே இல்லை.

தல விருட்சமான தொரத்தி மரத்தின் நுனியில், கல்லை வைத்துத் தொட்டில் கட்டினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குண்டம் இறங்கல் என்னும் தீமிதி திருவிழா இங்கு மிகவும் விசேஷமானது. வேண்டிக்கொண்டு பூக்குழிக்குள் இறங்கினால் அடுத்த ஆண்டுப் பூக்குழிக்குள் காளி நிறைவேற்றித் தந்திடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.
ஆடி செவ்வாய் கிடா வெட்டு இந்த வட்டாரத்திலேயே பிரபலம். வேண்டிய வரம் கிடைத்தவுடன் எலுமிச்சை மாலை சார்த்துவதும், மாங்கல்ய பாக்கியம் கிடைத்ததும் தாலியை அர்ப்பணிப்பதும் இங்கு முக்கிய வேண்டுதலாக உள்ளன.
பாதிக்கப்பட்ட எளிய மக்கள், இங்கு வந்து எலுமிச்சை தீபம் ஏற்றி கண்ணீர் வடிய வேண்டி நின்றால், அந்த அநீதிக்கு தக்க தண்டனை வழங்குவாள் என்கிறார்கள். துடியான இந்தக் காளியிடம் எவருமே தப்ப முடியாது. தன் பக்தர்களைக் கலங்க வைப்பவர்கள் யாரானாலும் மிகக் கடுமையாக தண்டித்துவிடுவாள் என்று சிலிர்ப்போடு கூறுகிறார்கள்.
அநியாயமாக ஏமாற்றப்பட்டோமே என்று தவித்துக்கொண்டிருக்கிறீர்களா, இந்தக் காளியிடம் உங்கள் வேண்டுதலை வைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள். நிச்சயம் உங்களுக்கு இவள் நீதியை வழங்குவாள்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் வனபத்ரகாளியை ஒருமுறை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை நலமாகும்.