விறுவிறுப்பாகத் தொடர்ந்த இரண்டாம் பாதியில், நெதர்லாந்து அணிக்கு கோல்டன் வாய்ப்பு கிடைத்தது. மாற்று வீரராகக் களமிறங்கிய வோட் வெக்ஹோர்ஸ்ட், பந்தை கிரிசென்சியோ சம்மர்வில்லிக்கு பாஸ் செய்ய, அவர் கோல் கம்பத்தை நோக்கி ஓடிவந்த கோட்டி காக்போவிடம் தட்டினார். பந்தை நோக்கிப் பாய்ந்த காக்போ, கோலாக மாற்றி நெதர்லாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தனிப்பட்ட முறையில் பெரும் சோகத்தில் இருந்த காக்போ, கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர, சக வீரர்கள் அவரைச் சூழ்ந்து ஆறுதல்படுத்தினர்.
நெதர்லாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் மொராக்கோ அதிர்ச்சி அளித்தது. கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில், மாற்று வீரர் செம்ஸ்டின் தல்பியின் கிராஸை, இசா டியோப் தலையால் முட்டி கோலாக மாற்றி ஆட்டத்தைச் சமன் செய்தார். இதனால், போட்டி கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

பெனால்டி ஷூட் அவுட் த்ரில்!
கூடுதல் நேரத்திலும் கோல் விழாததால், பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. மொராக்கோ தனது முதல் வாய்ப்பைத் தவறவிட்டது. ஆனால், அதன் பிறகு சுதாரித்துக்கொண்டது. நெதர்லாந்தின் நான்காவது பெனால்டியை கிரிசென்சியோ சம்மர்வில்லி அடிக்க, மொராக்கோ கோல்கீப்பர் பெளனு அதைத் தடுத்து ஹீரோவானார். இறுதியாக, இஸ்மாயில் சைபாரி தனது வாய்ப்பை கோலாக மாற்றி, மொராக்கோவின் 3-2 என்ற த்ரில் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம், மொராக்கோ அணி 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் சனிக்கிழமை ஹூஸ்டனில் நடைபெறும் போட்டியில் கனடா அணியை மொராக்கோ எதிர்கொள்கிறது.