கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

Spread the love

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் அப்பகுதி த.வெ.க நிர்வாகியாகவும் உள்ளார். இவர்  தனது சமூக வலைதள பக்கங்களில் இந்து கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தும் வகையில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் மற்றும் புகைப்படத்துடன் பதிவிட்டதுடன், இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.

இவர் மீது ஏற்கெனவே திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். அவரது கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், மதங்களுக்கிடையே பகைமையைத் தூண்டி சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அவரது எக்ஸ் கணக்கு மற்றும் செல்போன் எண்ணைக் கொண்டு அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து மைக்கேலை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *