பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை.
ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டுப் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது பல புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். மேலும் பல கோயில்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டு வந்தார். அந்தத் தலங்களில் நித்ய ஆராதனை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார்.
அவ்வாறு ஸ்ரீராமாநுஜர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றுதான் இடிகரை. கோவை மாவட்டம், துடியலூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். இங்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு நடுவே பெருமாள் கோயில் கொண்டிருப்பதுபோலவே இங்கும் இரு காட்டாறுகளுக்கு நடுவே பள்ளிக்கொண்டிருக்கிறார் பெருமாள் என்பது சிறப்பு. எனவே ‘இருகரை’ கொண்ட ஊர் என்று வழங்கப்பட்ட ஊரின் பெயர் நாளடைவில் மருவி இடிகரையாக மாறியது.

ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்தத் தலத்திலும் ஸ்ரீரங்கநாயகி தாயார் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். ஸ்ரீரங்கத்து ஆகமவிதிகளே இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. உற்சவர் திருநாமம் ஸ்ரீகஸ்தூரிரங்கன். இவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார்.
இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராதாகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். ஆண்டாளுக்கு உகந்த ஆடிப்பூரத் திருவிழா இங்கு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரைப் போன்றே இத்தலத்திலும் ஆண்டாளுக்குத் தனித் திருத் தேர் அமைந்துள்ளது. பிற ஆழ்வார்களும் இங்கு விமானத்துடன் கூடிய சந்நிதியில் அருள்கிறார்கள்.