சுமார் 177 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் கொண்டு செல்லப்பட்ட கோஹினூர், மீண்டும் தாயகம் திரும்ப வேண்டுமென்ற குரல் இப்போது அமெரிக்க மண்ணிலிருந்து பலமாக ஒலித்துள்ளது.
பிரிட்டிஷ் மகுடத்தின் உச்சியில் மின்னும் வைரத்தை விட, அந்த வைரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் இந்தியாவின் நீண்டகால ஏக்கமும், போராட்டமும் இப்போது சர்வதேச அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸின் அமெரிக்கப் பயணத்தின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி விடுத்த கோரிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நீண்டகாலமாகத் தொடரும் இந்த வரலாற்றுச் சிக்கலை, உலக நாடுகளின் சுதந்திரக் கொண்டாட்ட மேடையிலேயே மம்தானி துணிச்சலாக முன்வைத்துள்ளார். இந்த விவாதம் வெறும் ஒரு வைரத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இந்தியா இழந்த கௌரவத்தையும் செல்வத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியாகும்.
கடந்த 1849-ஆம் ஆண்டு, 10 வயது சிறுவனான மகாராஜா துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியால் இந்த வைரம் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் லாகூரில் வைத்துப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதனால்தான், மன்னரைச் சந்திக்கும்போது “எங்கள் நாட்டின் அடையாளத்தை எங்களிடமே திருப்பித் தாருங்கள்” என்று கேட்கப்போவதாக அவர் உறுதியாகத் தெரிவித்தார்.