Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரின் போது சஞ்சு சாம்சன் உடனான உரையாடல் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசி இருக்கிறார். அப்போது சஞ்சு சாம்சன் இந்திய அணி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதனை நீங்கள் செய்யுங்கள், நான் என்னுடைய பேட்டிங் மீதான நம்பிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்கிறேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதற்கு சஞ்சு சாம்சனின் அவுட் ஆஃப் ஃபார்ம் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையிலான உரையாடல் வெளி வந்துள்ளது.

இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடரின் போது நாங்கள் டீம் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை சேர்ப்பது கடினம் என்று அவரிடம் பேசி கொண்டிருந்தேன். உடனடியாக சஞ்சு சாம்சன், இந்த உலகக்கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமோ, அதனை நீங்கள் செய்யுங்கள்.
உங்களுக்கு எப்போது நான் தேவைப்படுகிறேனோ, அப்போது தயாராக இருப்பேன். அதற்கு என்னுடைய பேட்டிங் மீதான நம்பிக்கையை அதிகரிக்க பயிற்சியில் ஈடுபடுகிறேன். அவர் நேரடியாக என்னிடம் அப்படி சொன்ன போது, என்னுடைய நம்பிக்கையும் அதிகரித்தது. சில நபர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்றுதான் ஆச்சரியம் அடைந்தேன்.
நிச்சயமாக சஞ்சு சாம்சனை விலக்கியது நான் எடுத்த கடினமான முடிவுகளில் ஒன்று. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சஞ்சு சாம்சன் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. அப்போது அடுத்த 7 போட்டிகளில் நீ நிச்சயம் விளையாடுவாய். அந்த 7 போட்டிகளிலும் ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும், 8வது வாய்ப்பை உனக்கு கொடுப்பேன் என்றேன்.
பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த போது, டாப் ஆர்டரில் முழுமையாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததை உணர்ந்து சஞ்சு சாம்சனை சீனில் கொண்டு வந்தோம். அங்கிருது சஞ்சு சாம்சன் பட்டாசாய் வெடித்துவிட்டார். ஒரு மேஜிக்கை அரங்கேற்றினார் என்றே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.