சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் | C.V. Shanmugam Blasts AIADMK: Claims 31 Seats Won in Assembly Polls Were PMK’s ‘Alms’

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

திண்டிவனம்: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகளில் பெற்ற வெற்றி என்பது கூட்டணியில் இருந்த பாமக போட்ட பிச்சை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் பாமக இல்லாமல் இருந்திருந்தால் வெறும் 7, 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றிருக்கும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

cv shanmugam

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் செல்கிறது. தனது மகனை அரசியலுக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்.

கேள்வி கேட்டதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. ஆனால் இன்று அதிமுகவில் கேட்கும் நிலையே இல்லாமல் போய்விட்டது. அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.

கட்சிக்காக உழைத்தவர்கள், பணத்தை செலவு செய்தவர்கள், குடும்பத்தை மறந்து கட்சிக்காக பணியாற்றியவர்கள் இன்று வேதனையுடன் வெளியேறுகிறார்கள். அவ்வாறு வெளியேறி வேறு கட்சியில் இணைபவர்களை துரோகிகள் என்று கூறுவதா?

அதிமுக சீட்டுக் கட்டு போல் சரிந்து வருகிறது. எனவே இனியாவது அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் செயற்குழுவையாவது கூட்டுங்கள்.

அதிமுக தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் உணர்ந்து விட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை உணரவில்லை. இபிஎஸ் மகனை அரசியலுக்கு கொண்டு வர டிராமா போடுகிறார்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் இபிஎஸ் மகனும் வரலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதற்காக நிர்வாகிகள் அழைப்பதாக டிராமா போடுகிறார்.

1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தானே அந்த தோல்விக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பியவர்களை எல்லாம் திரும்ப அழைத்து அவர்களுக்கும் அமைச்சர் பதவி, கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்தவர்.

ஆனால் இத்தனை தோல்விகளுக்கு பிறகும் அந்த தோல்விக்கு பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். 2024 ஆம் ஆண்டும் பொதுக் குழுவை கூட்டி ஆலோசனை நடத்துங்கள் என கேட்டோம். ஆனால் அவர் கூட்டவே இல்லை.

ஆண்டுக்கு இரு முறை பொதுக் குழுவை கூட்ட வேண்டும். இந்த ஆண்டு தொடங்கி 5 மாதங்களாகி, 6 ஆவது மாதத்தில் இருக்கிறோம். இன்னும் முதல் குழுவையே கூட்டவில்லை. எங்கிருந்து 2 குழுக்களை கூட்டுவது?

இத்தனை ஆண்டுகளாக எங்களை அழைத்து எத்தனையோ முறை பேசியிருக்கிறார். அவர் சொன்ன கருத்துகளுக்கு நாங்கள் எதிர் கருத்தை சொன்னாலும் எங்களை சமாதானம் செய்து அவரது கருத்தை செயல்படுத்தினார்.

எப்போது அவர் திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நினைத்தாரோ அதற்குதான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். திமுகவை எதிர்த்து ஆரம்பித்த அதிமுகவை எப்படி திமுகவுடன் கூட்டணி அமைக்க யோசிக்க முடியும்?

47 தொகுதிகளில் அதிமுக வென்றதாக மார்தட்டி கொள்கிறார். அந்த 47-ல் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணியில் இல்லாமல் இருந்தால் நடந்து முடிந்த தேர்தலில் 7,8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றிருக்கும். அதிமுக தலைமை தவறை திருத்திக் கொள்ள மறுக்கிறது என சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு சி.வி.சண்முகம்- வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் அவர்களில் வேலுமணி உள்பட அனைவருமே மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் போய்விட்டனர். ஆனால் சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் தனியாகவே செயல்பட்டு வருகிறார்கள். இருவருமே பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *