சட்டமன்ற தேர்தல்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, விஜய் வாக்களித்தனர் – Kumudam

Spread the love

தமிழ்நாடு வெல்லும் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்த திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.

பின்னர் அதே வாக்குச்சாவடியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, மகன் இன்பநிதி ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

தனது மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஆழ்வார்ப்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து நலம் விசாரித்தார்.

வாக்களித்தபின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் எப்படி ஜனநாயக கடமை ஆற்றியிருக்கிறோனோ, அதேபோல் தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார்.

100 சதவிகிதம் நம்பிக்கை உள்ளது :  எடப்பாடி பழனிசாமி 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோரும் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 100% நம்பிக்கையோடு உள்ளேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது, வெற்றி உறுதி. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தேவையற்ற கேள்விகள் வேண்டாம் என அவர் கூறினார்.

தவெக தலைவராக விஜய் முதல் முறையாக வாக்களிப்பு 

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தார். வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை விஜய் காண்பித்தார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜய் அங்கிருந்த முதியவர்களிடம் கலந்துரையாடினார்.

விஜய்யை காண வாக்குச்சாவடிக்கு முன் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முன்னாதாக கீழே விழுந்த செல்போனை எடுத்து உரியவரிடம் விஜய் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் பொதுத்தேர்தலில் விஜய் வாக்களித்து இருப்பது குறிப்பிடதக்கது. 

வாக்களிக்காமல் இருப்பது தேச துரோகம் :  சீமான் 

நீலாங்கரை மாநகராட்சி பள்ளியில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்: ஜனநாயக கருவியான வாக்களிப்பதை அனைவரும் பயன்படுத்துக; வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம் தான்; ஒவ்வொரு வாக்கிலும் தான் மாற்றம் வரும்; வாக்களிக்காமல் இருப்பதும் தேச துரோகம் தான் என்றார். 

அரசியல் கட்சி தலைவர்கள்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் தங்களது வாக்குகளை வாக்குசாவடி மையங்களுக்க சென்று பதிவிட்டனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *