சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், நிறுவன மேலாளர் தேவேந்திர படேல் மற்றும் பிற அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சக்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரஃபுல் தாக்கூர், “பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 106 (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்), 289 (இயந்திரங்கள் தொடர்பான அலட்சியச் செயல்) மற்றும் 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ், தப்ரா காவல் நிலையத்தில் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உட்பட எட்டு முதல் பத்து நபர்களின் பெயர்கள் இந்த FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. விசாரணையின் போது வேறு நபர்களும் இதற்குப் பொறுப்பானவர்கள் என்று கண்டறியப்பட்டால், அவர்களின் பெயர்களும் சேர்க்கப்படும்,” எனத் தெரிவித்திருக்கிறார்.