இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் ஆளுநர் அர்லேகர். ஆளுநர் வைகை ஆற்றைப் பற்றி பேசியதும், ஆலோசனைக் கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் ஆளுநரைக் கண்டித்து பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ தமிழக ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, “உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்” என்று கூறியுள்ளார்.
ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா? ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்னையைத் தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே.
ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர் என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்” என பதிவிட்டிருக்கிறார்.