கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார் , தலைமை சிறை காவலர் திருமலை நம்பி ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
12-ம் தேதி இரவு சிறையில் சபரி வர்மனை சிறை வார்டன் உள்ளிட்டோர் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். ஜூலை 13-ம் தேதி அதிகாலையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் தேதி சிறையில் பார்த்தபோது நன்றாகயிருந்த சபரி வர்மன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் 13-ம் தேதியே உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் 13-ம் தேதி பிரேதப் பரிசோதனை நடத்தவில்லை. 14-ம் தேதியான நேற்று உறவினர்கள் உடலை வாங்கமாட்டோம் எனப் போராட்டம் நடத்திய நிலையில் நாகர்கோவில் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மேயர் (பொறுப்பு) மேரிபிரின்ஸிலதா, வழக்கறிஞர்கள் லீனஸ்ராஜ், சரவணன் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், பிரேதப் பரிசோதனை முடியும் வரை சபரி வர்மனின் உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஸ்டின் எம்.எல்.ஏ உள்ளிட்ட தி.மு.க-வினர் இருந்தனர்.
சபரி வர்மனின் உறவினர்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால் நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. மேலும், சபரிவர்மனின் உடலில் 19 காயங்கள் இருப்பதும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட உண்மையும் வெளிவர காரணமாக அமைந்தது.