பணம் சம்பாதிப்பதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிவதில்லை.
மாதச் சம்பளம் கையில் கிடைக்கும்போது ஒரு தற்காலிக சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால், நிஜமான நிதிச் சுதந்திரம் என்பது எந்த ஒரு ஆணைச் (அப்பா, கணவர், அல்லது மகன்) சாராமலும், உங்களுக்கென்று ஒரு நிரந்தர மூலதனம் இருப்பதில்தான் அடங்கியிருக்கிறது. உழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த ஆசை நிச்சயம் உண்டு.
ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது? நமது சமூகம் பெண்களுக்கு பணத்தைச் சேமிக்க மட்டுமே கற்றுக் கொடுத்திருக்கிறது; முதலீடு செய்ய அல்ல. கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் வீணாகிவிடுமோ என்ற பயத்தில், பெரும்பாலான பெண்கள் தங்கள் சேமிப்பை வங்கிச் கணக்கிலோ அல்லது சீட்டிலோ போட்டு வைக்கிறார்கள். இங்குதான் மிக அடிப்படையான ஒரு தவறு நடக்கிறது.
உங்கள் பணம் சத்தமின்றி கரைகிறது…
பணவீக்கம் (Inflation) என்ற கண்ணுக்குத் தெரியாத திருடன் தினமும் உங்கள் பணத்தின் மதிப்பை அழித்துக்கொண்டிருக்கிறான். இன்று நீங்கள் வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில லட்சங்கள், இன்னும் இருபது வருடங்களில் உங்களின் ஒரு சாதாரண மருத்துவச் செலவுக்குக் கூடப் போதாது.
கொஞ்சம் நிதர்சனத்தை யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துவிட்டு, 60 வயதில் சொந்தக் காலில் நிற்க முடியாமல், ஒவ்வொரு சிறு தேவைக்கும் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்பது எவ்வளவு பெரிய அவலம்? அது உங்களின் உழைப்பிற்கே நீங்கள் செய்யும் துரோகம் அல்லவா?
உங்களைக் காப்பாற்றும் வழி இதுதான்!
இந்தச் சுழலில் இருந்து தப்பிக்க ஒரே வழி, உழைக்கும் உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க வைப்பதுதான். அதற்கு SIP (Systematic Investment Plan) முறை ஒரு மிகச் சிறந்த, நிரூபிக்கப்பட்ட கருவி.
ஒரு எளிய கணக்கைப் பார்ப்போம்: மாதம் ரூ. 5000-ஐ வங்கியில் 15 வருடங்கள் சேமித்தால் (சராசரியாக 4% வட்டி), நீங்கள் கட்டிய ரூ. 9,00,000 வெறும் ரூ. 12.2 லட்சமாக மட்டுமே வளரும்.