International
oi-Vigneshkumar
காத்மாண்டு: உலகின் மிக பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்களுக்கு சிறுநீரும் ஒரு காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சிக்கும் மலையேற்ற வீரர்கள், பயணிகள், வழிகாட்டிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் பணியாளர்கள் என ஏராளமானோர் ஆண்டுதோறும் எவரெஸ்ட் பேஸ் கேம்பில் கூடுகின்றனர். மலையேறும் காலங்களில் இப்பகுதி இமயமலையின் மிகவும் பரபரப்பான இடங்களில் ஒன்றாக மாறுகிறது. அதிகரிக்கும் இந்த மனித நடமாட்டம், இமயமலை பனிப்பாறையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

எவரெஸ்ட் பேஸ் கேம்ப்
குறிப்பாக எவரெஸ்ட் பேஸ் கேம்பில் அதிகரிக்கும் மனித செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள கும்பு பனிப்பாறை உருக முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சர்வதேச அளவில் ஏற்படும் பருவநிலை மாற்றம், புதை படிவ எரிபொருட்களின் பயன்பாடு ஆகியவை பனிப்பாறைகளை உருக்குவது அனைவருக்கும் தெரியும். அத்தோடு இன்னொரு சுவாரசிய காரணமும் இருக்கிறது.
அதாவது எவரெஸ்ட் கேம்ப் பகுதியில் குவியும் மனிதர்கள், அங்கு சிறுநீர் கழிக்கிறார்கள். அந்த சிறுநீரில் இருந்து வெளியேறும் வெப்பமும் கூட பனிப்பாறைகள் உருக காரணமாக அமைந்துவிடுகிறதாம். அதாவது பருவநிலை மாற்றம் ஆகியவை பூமியை மொத்தமாக பாதிக்கும் நிலையில், அங்கு மழை ஏற செல்வோர் தங்களை அறியாமல் செய்யும் இந்த சிறு விஷயமும் கூட சுற்றுச்சூழலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மலையேற்ற சீசன்
நேபாளத்தின் நில மேலாண்மை அமைச்சகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2023ஆம் ஆண்டு வசந்த கால மலையேற்ற சீசனின்போது எவரெஸ்ட் பேஸ் கேம்பில் டேட்டா சேகரிக்கப்பட்டன. முதலில் முகாமில் மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியாகும் வெப்பத்தை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி, மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவை குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. இதனுடன் மனிதர்கள் சிறுநீர் கழிப்பதால் உருவாகும் வெப்பமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
1991 முதல் 2023 வரையிலான 32 ஆண்டுகளில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்தையும் ஆய்வாளர்கள் சாட்டிலைட் டேட்டா மூலம் ஆய்வு செய்தனர். இதில் எவரெஸ்ட் பேஸ் கேம்பின் மேற்பரப்பு வெப்பநிலை ஆண்டுக்கு சராசரியாக 0.28°C அதிகரித்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக எவரெஸ்ட் முகாமில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பு, அருகில் உள்ள கும்பு பனிப்பாறையின் மேற்பரப்பில் பதிவான வெப்பநிலை உயர்வை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
வெப்பநிலை
மேலும், எவரெஸ்ட் பேஸ் கேம்புக்கு வடக்கே உடனடியாக அமைந்துள்ள பாறை மற்றும் மண் படிவங்களில் பதிவான வெப்பநிலை அதிகரிப்பை விடவும் பேஸ் கேம்பின் வெப்பநிலை சுமார் 15% அதிகமாக இருந்ததாக ஆய்வு கூறுகிறது. உதாரணமாக 2023ஆம் ஆண்டு மலையேறும் சீசனின் போது பேஸ் கேம்பில் மேற்கொள்ளப்பட்ட மனித செயல்பாடுகளால் வெளியிடப்பட்ட மொத்த வெப்ப ஆற்றல் 849,174 ± 179,774 மெகாஜூல்கள் ஆகும். இந்த அளவு வெப்ப ஆற்றல், சுமார் 2,492 ± 528 டன் பனிப்பாறை மற்றும் பனியை உருகச் செய்ய போதுமானதாகும்.
மனித நடமாட்டம்
எவரெஸ்ட் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித செயல்பாடுகள் மட்டுமே காரணம் என்று ஆய்வு கூறவில்லை. சர்வதேச பருவநிலை மாற்றமும் முக்கிய காரணமாக ஒன்றாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே எவரெஸ்ட் பேஸ் கேம்பில் மனிதர்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சிக்கும் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கையுடன், மலையேற்ற பயணிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது பாதிப்பு ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில், எவரெஸ்ட் பேஸ் கேம்பில் நடைபெறும் மனித நடவடிக்கைகள் அதிகரிப்பது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.