அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் மிகப்பெரிய அதிகாரிகள் பட்டாளத்தையும் அழைத்து சென்றிருந்தார்.
சீன அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு ஹார்மூஸ் ஜலசந்திக்கு சீனா தனது படைகளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த கோரிக்கையையும் சீனா நிராகரித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
டொனால்டு ட்ரம்ப் தனது சீனா பயணத்தை முடித்துக்கொண்டு அதிகாரிகளுடன் தாயகத்திற்குப் புறப்பட்டு சென்றார். அவர்கள் புறப்பட்டு செல்லும்போது அமெரிக்க அதிகாரிகள் சீனாவில் தங்களுக்குக் கிடைத்த பரிசு பொருட்கள், பேட்ஜ்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொபைல் போன்கள் உட்பட சீனாவில் கிடைத்த அனைத்து பொருட்களையும் சீனாவிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் அந்தப் பொருட்களை சீனா விமான நிலையம் வரை எடுத்து வந்தனர்.

ஆனால் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன்பு படிக்கட்டுக்கு அருகில் இருந்த குப்பை தொட்டியில் அனைத்து பொருட்களையும் போட்டுவிட்டு தங்களது விமானத்தில் ஏறினர்.
சீனாவில் இருந்த எந்தப் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அமெரிக்கா கட்டளையிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சீனா தரப்பில் கொடுக்கப்பட்ட ஒரு பொருளைக்கூட விமானத்தில் எடுத்து வரக்கூடாது என்று தெரிவித்து இருந்தனர்.
இதை அமெரிக்க அதிபருடன் சீனாவிற்குச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் உறுதிபடுத்தி இருக்கிறார். அதோடு அது தொடர்பான காணொளிகளும் வைரலாகி இருக்கிறது. சீனா கொடுத்திருக்கும் பொருட்கள் மூலம் உளவு பார்க்கும் அபாயம் இருப்பதாகவும், சைபர் அச்சுறுத்தல் இருக்கும் என்ற அச்சம் காரணமாகவும் அமெரிக்கா இது போன்று செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு மேற்கொண்ட உயர்மட்ட தூதரகப் பயணத்தின்போது, கடுமையான ஒட்டுக்கேட்பு மற்றும் இணைய பாதுகாப்பு காரணமாக அமெரிக்கக் குழுவினர் அனைவரும் மிகக் கடுமையான “டிஜிட்டல் கட்டுப்பாடுகளின்” கீழ் வைக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகி வருகிறது. இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சி பயனளிக்கவில்லை.
இதையடுத்து வேறு சில நாடுகளும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இதுவரை ஈரான் நிரந்தரமாக அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று கூறி வந்த டொனால்டு ட்ரம்ப், இப்போது 20 ஆண்டுகளுக்காவது அணு ஆயுத திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.