வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை தமிழகம் வழியாக நிலவுவதால், இன்றும் நாளையும் மாநிலத்தின் பல இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளை கூடுதலாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்றும், மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மழை பெய்தாலும், மே 4 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்ஸியஸாக இருக்கும். அதிகப்படியான ஈரப்பதம் காரணமாகச் சென்னையில் ஒருவித அசௌகரியமான சூழல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.