சென்னை: டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை – பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர் – youth arrested in woman harrssment case

Spread the love

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சத்தம் போட்டிருக்கிறார். உடனே பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர், தன்னுடைய பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மனவேதனையடைந்த இளம்பெண், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

சம்பவம் நடந்த இடதுக்குச் சென்ற போலீஸார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான இளைஞரின் பைக் நம்பரை வைத்து அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கணேஷ், (21), திருவான்மியூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து கணேஷை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அதோடு குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக்கையும் கணேஷிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *