மாங்காடு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தாலே மனதில் வைராக்கியம் ஏற்படும். இத்தலத்தில்தான் சுக்கிரன் தன் இழந்த கண் பார்வையைப் பெற ஈசனை வழிபாடு செய்தார். அதன் பலனாகத் தன் கண் பார்வையையும் பெற்றார். எனவே கண் பார்வையில் பிரச்னை உள்ளவர்கள் இத்தலம் வந்தால் விரைவில் சுகம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
மேலும் சுக்கிரனுக்கு அருளிய தலம் இது என்பதால் சுக்கிர தோஷம் உடையவர்கள், சுக்கிரனின் அருள் வேண்டுபவர்கள் இத்தலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்ய சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஆதியில் இத்தலத்தில் அன்னை உக்கிரமாக இருந்தாள் எனவும் ஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தைக் குறைக்க, ஶ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்ய அன்னை மனம் குளிர்ந்து வரம் தரும் வடிவினளாய் ஆனாள் என்றும் சொல்கிறார்கள்.

சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறுவாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.
இங்குள்ள அம்பாள் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகின்றார். சப்தக்கன்னிகள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன் என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை மாங்காடு காமாட்சியை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும். நலமாகும்.