சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் தனிமையில் இருக்கலாம் என ராஜாவிடம் சுதாகர் கூறியிருக்கிறார். அதை நம்பிய ராஜாவும், சுதாகர் கூறிய தி.நகர் வீட்டுக்கு 19.07.2026-ம் தேதி மாலை தனியாக சென்றிருக்கிறார்.
அங்கு ராஜாவை சுதாகர் அன்பாக வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டுக்குள் மேலும் இருவர் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து ராஜாவை கத்தி முனையில் மிரட்டி ஜி பே மூலம் 15,000 ரூபாயை பறித்திருக்கிறார்கள். பின்னர் ஏ.டி.எம்மிற்குச் சென்று 20,000 ரூபாயையும் எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பணத்தை இழந்த ராஜா, மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து ராஜாவின் ஜி பே-விலிருந்து எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்ட விவரத்தை சேகரித்தனர். அதன்அடிப்படையில் தி.நகரைச் சேர்ந்த .சுதாகர் (20), அவரின் நண்பர்கள் சதீஷ் (20) அசோக் நகரைச் சேர்ந்த விக்னேஷ்வர் (27) ஆகிய மூன்று பேரை பிடித்தனர். அவர்களிடமிருந்து 21,000 ரூபாயையும் ஒரு செல்போன், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுதாகர் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சதீஷ், விக்னேஷ்வர் ஆகியோர் பைக் ஹோரூமில் வேலை செய்து வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசையைக் காட்டி பணம் பறித்த சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.