சென்னை: வாக்குகள் எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்’ படம் பார்த்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த இளைஞர் | Police enquiry youth, who watched Janyayan movie at counting center

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்குகள் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அதனால் 110 சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் வாக்குகள் எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சி.சி.டி.வி கண்காணிப்பு அறையில் பணியிலிருந்த ஒருவர், தன்னுடைய லேப்டாப்பில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நடித்து திரைக்கு வராத `ஜன நாயகன்” படத்தைச் சட்ட விரோதமாகப் பார்த்திருக்கிறார். அதோடு அதை புகைப்படமாக எடுத்து ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்த உடனடியாக விசாரணையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் ஐடி குறித்து சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாக்குகள் எண்ணும் மையத்தின் சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் (31) என்பவரின் ஃபேஸ்புக் ஐடி எனத் தெரியவந்தது. அதனால் அவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், “வாக்குகள் எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி கேமராக்களைக் கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு ஒப்பந்த அடிப்படையில் சிலர் பணியாற்றி வருகிறார்கள். இதில் யுவராஜ் என்பவர், கடந்த 19-ம் தேதி தேர்தல் ஆணையம் வழங்கிய தற்காலிக அடையாள அட்டையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் `படிச்சுதான் அரசு அதிகாரி ஆக முடியல, சரி, உழைப்பாளி உழைப்பால் ஆகிட்டேன் பிரண்ட்ஸ், மொத்த சென்னையும் இப்ப நம்ப கண்ட்ரோல்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து `ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ப தளபதி என்ட்ரிதான்’ என அடுத்த பதிவு போட்டிருக்கிறார்.

யுவராஜ். இந்தப் பதிவை பார்த்தவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து எங்களிடம் புகார் வந்ததும் யுவராஜிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்தப் பதிவுகளைப் போட்ட யுவராஜ், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பிறகு யுவராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *