
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க செல்வபெருந்தகையே காரணம். தேர்தல் நேரத்திலேயே செல்வபெருந்தகை மீது டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு கடும் கோபம் இருந்தது. அதன் வெளிப்படாக தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என செல்வபெருந்தகை கூறி வந்தார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரசு கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20 தொகுதிகள் வரை காங்கிரசு வெற்றி பெற்று இருக்கும், அதனை தடுத்தவர் செல்வபெருந்தகை என அவர் மீது கோபத்தில் உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம், வரும் 18ம் தேதி, சென்னையில் வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. அதன்பின், அவர் கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகை விலகுவார் என சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி தேர்தலில், 2029 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரசுக்கு தேவையான இடங்களை கேட்டு பெற தவெக மற்றும் முதல்வர் விஜயுடன் இணக்கமாக காங்கிரசு தலைமை தேவை என ராகுல்காந்தி நினைக்கிறார். அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் தயார் செய்துள்ள மாநில தலைவருக்கான பட்டியலில், கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரும், எம்.பி.,யுமான மாணிக்கம் தாகூர், தரவு பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஜோதிமணியும் தனக்கு தலைவர் பதவி வேண்டும் என டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதால், இந்த மூவர் இடையே, மாநில தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் யாரை ராகுல்காந்தி டிக் அடிப்பார் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.