ஜெய்ப்பூரில் உள்ள “வன்ஷிவ் டெக்’ நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்குப் பிறகு பணியில் சேரவிருந்தார்.
கடைசி நேரத்தில் ரூ.50,000 கூடுதல் சம்பளம், ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ வசதி எனக் கேட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் நிறுவனம் ஒப்புக்கொண்டது. பயிற்சிகள் வழங்கப்பட்டு, லேப்டாப்பும் அனுப்ப்பட்டது.
ஆனால், வேலைக்குச் சேர வேண்டிய முதல் நாளன்று அந்தப் பெண் அழைப்புகளை ஏற்கவில்லை. பின்னர், “தனிப்பட்ட காரணங்களால் பணியில் சேர முடியாது; லேப்டாப்பை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.
கோபமடைந்த சி.இ.ஓ, “லேப்டாப்பை உடனடியாகத் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என மின்னஞ்சல் அனுப்பிய பிறகே அப்பெண் அதைத் திருப்பிக் கொடுத்தார்.
விசாரித்ததில், வேறொரு நிறுவனம் ரூ.25,000 கூடுதலாகத் தருவதாகக் கூறியதால் அந்தப் பெண் அங்கு சேர்ந்தது தெரியவந்தது. தொழில்முறையற்ற இந்தச் செயலால் அதிருப்தியடைந்த சி.இ.ஓ இச்சம்பவத்தைப் பதிவிட்டார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “அந்தப் பெண் வேறு ஏதேனும் நியாயமான காரணத்திற்காக இப்படிச் செய்திருக்கலாம்” எனச் சிலர் ஆதரவாகப் பேச, பெரும்பாலானோர், “நிறுவனங்களை ஏமாற்றும் இதுபோன்ற போக்குகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.