Business
oi-Vigneshkumar
சென்னை: சொந்த வீடு என்பது பலருக்கு கனவாக இருந்தாலும் கூட கடன் வாங்கி சொந்த வீட்டை வாங்கும்போது நாம் மிக பெரிய ஆபத்தில் சிக்கும் சூழல் இருப்பதாக சொல்கிறார் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். மேலும், ஏன் சொந்த வீடு என்பது இந்தக் காலத்தில் செல்வத்தை சேமிக்க பயன்படாது என்பது தொடர்பாகவும் அவர் விளக்கியுள்ளார்.
சொந்தமாக ஒரு வீடு என்பது இந்தியாவில் பல கோடி மக்களின் கனவாக இருக்கிறது. இளைஞர்கள் பலரும் அந்த கனவை நோக்கியே பெரும் பயணத்தில் உள்ளனர். இருப்பினும், கடன் வாங்கி சொந்த வீடு வாங்கும்போது நாம் மிக பெரிய கடன் வலையில் சிக்கிக் கொள்கிறோம் என எச்சரிக்கிறார் ஆனந்த் சீனிவாசன். மேலும், உண்மையில் கடன் வாங்கி வீடு வாங்குவது யாருக்கு லாபம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “சொந்த வீடு அவசியமே இல்லை. சென்னையின் பிரதான ஏரியாவில் உங்களுக்கு ரூ.25,000-30,000க்கு இரண்டு பெட் ரூம் வீடு கிடைக்கும். அதே வீட்டை நான் வாங்க போனால் 1.75 – 2 கோடி ரூபாய் சொல்வார்கள். அந்த 1.75 கோடி ரூபாயை நான் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் 8 முதல் 10% வரை வட்டி கிடைக்கும். அதேநேரம் வீடு வாங்கினால் 2% மட்டுமே வாடகை வருமானம் கிடைக்கும்.
சொந்த வீடு
நம்மில் பலரும் கடன் வாங்கி தான் வீடு வாங்குகிறார்கள். அந்த கடனையும் நாம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை கட்ட வேண்டி இருக்கும். ஆனால், இந்த காலத்தில் யாருமே 20 முதல் 25 ஆண்டுகள் அதே ஊரில் அதே ஏரியாவில் இருப்பார்கள் என சொல்ல முடியாது. பணியிட மாற்றத்தை இந்த காலத்தில் தவிர்க்க முடியாது. பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுவிடுகிறார்கள். எனவே, அடுத்த 25 ஆண்டுகள் இதே இடத்தில் தான் இருப்பேன் என யாராலும் சொல்ல முடியாது. எனவே, உங்களின் அடுத்த 25 ஆண்டு உழைப்பை ஏன் இப்போதே வங்கியிடம் விற்கிறீர்கள்?
உங்க வீடு இல்லை
பலரும் கடன் கட்டும்போதே அது உங்கள் வீடு என நினைக்கிறீர்கள்.. ஆனால், உண்மையில் கடன் கட்டும் காலத்தில் வீடு உங்களுடையது இல்லை. அது வங்கியுடையது. நீங்கள் மாதமாதம் வட்டி கட்ட வேண்டும். 25 ஆண்டுகள் கடனை கட்டிய பிறகே அந்த வீடு உங்கள் கைக்கு வரும். அப்போது வீட்டின் மதிப்பை விட 3 மடங்கு நீங்கள் அதிகம் கட்டி இருப்பீர்கள்.. வட்டி காசு கூட அப்போது வீட்டை விற்றால் கிடைக்காது.
வீட்டை பொறுத்தவரை பெரும் பணக்காரர்கள் சேர்ந்து உங்களுக்கு ஒரு கனவை விற்கிறார்கள். அதாவது பெரும் பணக்காரரிடம் சொந்தமாக கட்டுமான நிறுவனம் இருக்கும். சிமெண்ட் நிறுவனம், வங்கியில் முதலீடு செய்திருப்பான். அதாவது வீடு கட்டுவது, அதில் பயன்படுத்தப்படும் கட்டுமானம், கடன் கொடுக்கும் வங்கி என எல்லாவற்றில் இருந்தும் கோடீஸ்வரர்களுக்கு பணம் போகும்.
யாருக்கு லாபம்
பிறகு அந்த வீட்டை மக்கள் வாங்குவார்கள். அவர்களும் வீட்டுக்கடன் என்ற பெயரில் 25 ஆண்டுகள் பணக்காரர்களிடம் இருக்கும் வங்கியிடமே கடனை கட்டுவார்கள். அதாவது பணக்கார கும்பலுக்கு மட்டும் தான் இந்த பணம் எல்லாமே போகும். இதனால் மிடில் கிளாஸுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. உங்களால் அதில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியாது. நான் இப்படி சொல்வதால் நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். ஆனால், அதுதான் உண்மை. ஒரு காலத்தில் வீடு வாங்கி பணக்காரன் ஆக முடிந்தது. ஆனால், இப்போது அந்த காலம் முடிந்துவிட்டது” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!


