சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இரண்டு மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அந்த வகையில், உயிரிழந்த இருவரின் உடல்கள் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தன. திருச்சி விமான நிலையத்தில் உயிரிழந்த மீனவர்கள் உடலுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல, அதிகாரிகளும் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அமைச்சர் ஸ்ரீநாத் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, மீனவர்களின் உடல்கள் அமரர் ஊர்தி மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.