அதீத அறிவு, இளகிய மனம், மனைவி மீதான காதல், ஆற்றாமையிலும் பிறழாத உறுதி என ஜி.டி.நாயுடுவின் நடுவயது வாழ்க்கையை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். பிரச்னைகளைக் கூலாகச் சமாளிக்கும் இடங்களில் மாதவனின் அனுபவம் கைகொடுக்கிறது. ஆனால், முதுமைக்கான நடிப்பில் வெளிப்படும் செயற்கைத்தனம் துருத்திக்கொண்டு நின்று தொந்தரவு செய்கிறது.
அறிவியல் மீதான ஆர்வம், ஆர்வம் தரும் துருதுருப்பு, ஆங்காங்கே விளையாட்டுத்தனம் என ஜி.டி.என்-இன் இளம் வயதிற்குத் தேவையானதைச் செய்திருக்கிறார் டீஜே அருணாசலம்.
விடாத நேர்மை, ஜி.டி.என்-ஐ தோற்கடிக்கப் போராடுவது எனத் தட்டையான கதாபாத்திரத்தைத் தன் அனுபவத்தாலும், பிரத்யேக உடல்மொழியாலும் ரசிக்கும்படி மாற்றி, இரண்டாம் பாதிக்கு வலுசேர்க்கிறார் ஜெயராம்.
நக்கல், நையாண்டி, சேட்டை, எமோஷன் எனத் தான் வரும் எல்லாக் காட்சிகளில் மின்சாரம் பாய்ச்சும் சத்யராஜ், படம் முழுவதுமே தள்ளாடும் இடங்களைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.
துஷாரா, கருணாகரன், முரளிதரன், பிரியாமணி ஆகியோர் கவனத்தில் நிற்க, வினய், தம்பி ராமையா, ஷீலா, அதீதி பாலன், மோகன் ராமன், ரமேஷ் திலக் போன்றோர் துணைக் கதாபாத்திர நெரிசலில் வந்துப் போகிறார்கள்.

கோவை கிராமங்களின் பசுமை, அக்கால மின்விளக்குகளின் எழில் போன்றவற்றை முடிந்தளவுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து, ஒரு ‘பயோ-பிக்’ படத்திற்கான உணர்வை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் கடத்தியிருந்தாலும், ஆங்காங்கே தலைதூக்கும் செயற்கைத்தனம் தொந்தரவும் செய்கிறது.
பிஜித் பாலாவின் படத்தொகுப்பு தேவையான இடத்தில் நிதானத்தையும், வேகத்தையும் கொடுக்கத் தவறியிருக்கிறது.