ஈரான் போர் முடிந்து, ஹார்முஸ் நீர்சந்தி திறக்கப்பட்டால் கூட, சர்வதேச சந்தையில், ஒரு பீப்பா கச்சா எண்ணெயின் விலை 85-90 டாலர்களுக்குத் தான் விற்பனையாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலை நீடித்தால், இந்திய பொருளாதாரத்திற்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை ஜெஃப்ரிஸ் நிறுவனம் தற்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
> ஜூலைக்குப் பிறகும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்கள் என விற்பனையாகி வந்தால், இந்தியா ரூ.1.25 டிரில்லியன் – 1.50 டிரில்லியன் அளவிற்கு நிதிச்சுமையை சந்திக்கும்.

> 2027 நிதியாண்டில், சாலை, ரயில்வே, கட்டமைப்பு போன்றவைகளுக்கு மத்திய அரசு கடந்த நிதியாண்டை விட, 10 சதவிகிதம் அதிகமாக பட்ஜெட் ஒதுக்கி உள்ளது.
ஆனால், நிதிச்சுமையினால், இந்தப் பட்ஜெட் ஒதுக்கீடு 0 – 2 சதவிகிதம் வரையில் குறையலாம்.
> கச்சா எண்ணெய் விலை உயர்வு அதை இறக்குமதி செய்யும் போது, ரூ.75,000 கோடி – 90,000 கோடி வரை நிதிச்சுமையை அதிகரிக்கும்.
> கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இரண்டு மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்தன.
இதனால், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நகர்வு இறக்குமதி வரி வருமானத்தை ரூ.1 டிரில்லியன் – 1.2 டிரில்லியனுக்குக் குறைக்கும்.
> உலக அளவில் எல்.பி.ஜி விலை 44 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் எல்.பி.ஜி விலை வெறும் 7 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
யுரியா விலை சர்வதேச அளவில் 120 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உரங்களின் விலை ஏற்றப்படவில்லை.

இதனால், உரங்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.0.30 டிரில்லியன் – 0.40 டிரில்லியன் அளவிற்கு நிதிச்சுமை.
> இந்திய வானிலை மையத்தின் கணிப்புப்படி, வருகிற ஜூன் – செப்டம்பர் மாதங்களில் வழக்கத்தை விட, 8 சதவிகிதம் குறைவாகவே மழை பெய்யும்.
இதனால், கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள், விவசாயத்தைத் தாண்டி, பிற வேலைகளையும் தேடுவார்கள்.
இதனாலும், ரூ.0.10 – 0.20 டிரில்லியன் நிதிச் சுமையை ஏற்றும்.
இதை சமாளிக்க மாநில அரசுகள் மத்திய அரசுகளிடம் தான் நிதிக் கேட்கும். இதுவும் இந்திய பொருளாதாரத்திற்கு சிக்கல்.
> இத்தனைக்கு மத்தியில் ஒரே ஒரு நல்லது என்றால், இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும், தங்கம், வெள்ளி இறக்குமதி தொடர்ந்து நடக்கும்.
இதனால், இந்தியாவிற்கு ரூ.0.4 டிரில்லியன் – 0.6 டிரில்லியன் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.