தமிழில் “ஜெய் பீம்’ திரைப்படத்தில் ‘செங்கேணி’ கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த லிஜோ மோல் நடிப்பில் ‘உன்மதம்’ என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படம் தொடர்பாக ‘Cinema Express’ ஊடகத்திற்கு லிஜோ மோல் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பட வாய்ப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியிருக்கும் லிஜோ மோல், “ஒவ்வொரு திரைப்படமும் அதற்குப் பிறகு வரும் வாய்ப்புகளின் தன்மையை மாற்றுகிறது. ஒரு படத்தில் நம் நடிப்பைப் பார்த்துவிட்டு, அதே போன்ற கதாபாத்திரங்களோடு நம்மை அணுகுகிறார்கள்.
‘ஜெய் பீம்’ திரைப்படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட அதிகமான பாராட்டுகளை அது எனக்குப் பெற்றுத் தந்ததுடன், அதே போன்ற பல வாய்ப்புகளையும் கொண்டு வந்தது.
ஆனால், நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ‘பொன்மான்’ திரைப்படத்தில் ‘ஸ்டெஃபி கிராஃப்’ கதாபாத்திரமும் பல பரிமாணங்களைக் கொண்டது தான், ஆனால் ‘ஜெய் பீம்’ கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.