டிரம்ப்க்கு போட்டி விஜய் தான்….எடப்பாடி சொன்னத கவனிச்சிங்களா? – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சி முறை தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலை மாற்றி, தவெக என்ற புதிய கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தார் முதலமைச்சர் விஜய். ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத சூழலில், திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் தவெக ஆட்சி அமைத்ததாகவும், நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

தவெக ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த ஜோசப் விஜய், அவற்றில் எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக, வீட்டு உபயோகத்துக்காக இரு மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தப்படும் என்று அறிவித்துவிட்டு, பின்னர் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே என்ற புதிய விதியை அறிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், விவசாயிகளுக்கான முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பின்னர் அதற்கும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மூன்று சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும் அரைகுறையாக நிறைவேற்றப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், அரசியல் கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. திட்டங்களை அறிவித்துவிட்டு அவற்றை முழுமையாக நிறைவேற்றாமல் அரைகுறையாக செயல்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, தவெக தரப்பில் ஒன்றிய அரசு போதிய நிதி வழங்காததும், கடந்த அரசு பல்வேறு கடன்களை வாங்கி வைத்துவிட்டு கஜானாவை காலி செய்துவிட்டதுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தவெக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், சமீபகாலமாக முதலமைச்சர் விஜய் அடுத்த பிரதமராக வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, 2029 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் விஜய் வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும், தவெக அமைச்சர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழ்நாடு சட்டசபை சினிமாவில் வருவது போல் நடைபெறுகிறது. நேரலையாக பேரவை நடவடிக்கைகள் ஒளிபரப்பினால்தான் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். பேரவையை 24 மணி நேரம் கூட சபாநாயகர் நடத்துவார். பெரும்பாலான அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது இல்லை.

தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அரசிடம் நிதி இல்லாத நிலையில், அதிகமான அறிவிப்புகளை ஏன் வெளியிடுகிறார்கள்?

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. அப்படியே நீடித்தாலும் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். அதிகமாகக் கடன் வாங்கும் தவெக அரசு, வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் என்கிறார்கள். அது அதிகமாக இருப்பது தவெக ஆட்சியில்தான்.”

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம், “அடுத்த பிரதமர் விஜய்” என்று பிரசாரம் செய்யப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “டிரம்ப்புக்குப் பதிலாக முதலமைச்சர் விஜய்கூட அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகலாம்; தவறில்லையே. அது அவருடைய விருப்பம்” என்று பதிலளித்தார்.இது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *