ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு தற்போது முற்றிலும் சிதைந்து, பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களில் டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஒரே உலகத் தலைவர் மெலோனி ஆவார். ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பே, மெலோனி அமெரிக்காவின் “மார்-ஏ-லாகோ’ (Mar-a-Lago) பகுதிக்கு நேரில் சென்று ட்ரம்பைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்தார். ட்ரம்பும் மெலோனியை “அற்புதம்”, “நம்பமுடியாதவர்” என்று பலமுறை பாராட்டி, ஐரோப்பாவில் தனது மிக முக்கிய கூட்டாளியாகக் கருதினார்.

இருப்பினும், அடுத்தடுத்து நடந்த சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த அசுர கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தின. உக்ரைன் விவகாரம், உலக வர்த்தகக் கொள்கைகள் மற்றும் காசா மோதல் ஆகியவற்றில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. குறிப்பாக, கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா தன் பலத்தைப் பயன்படுத்தக்கூடும் என்ற ட்ரம்பின் பரிந்துரைகளை மெலோனி பகிரங்கமாக விமர்சித்தார். இது இருவருக்கும் இடையிலான சுமுக உறவில் முதல் பாதிப்பை ஏற்படுத்தியது.