Business
oi-Vigneshkumar
சென்னை: இப்போது தங்கம் மட்டுமின்றி, பங்குச்சந்தையும் கூட தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்.. எது பாதுகாப்பான ஒரு லாபத்தை தரும் என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தங்கம் மற்றும் பங்குச்சந்தை என இரண்டுமே கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இப்படி இரண்டுமே சரிய என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்ன செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “சர்வதேச அளவில் கடன் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. தற்போதைய வட்டி விகிதத்தில் கடன் பத்திரத்தை வாங்குவதற்கு ஆள் இல்லை என்பதே இதற்கு அர்த்தம். அமெரிக்காவின் 5 வருட ஈல்டு 5.3% கிட்ட போயிடுச்சு, 10 வருட ஈல்டே 5% போய்விடும். இப்போது அது 4.97%ஆக இருக்கிறது. சீக்கிரமே 5%ஐ தாண்டிவிடும். 2007க்கு அப்புறம், அதாவது கடந்த 20 வருஷத்தில் இதுதான் அதிகம்.
அமெரிக்காவிடம் மொத்தம் 40 டிரில்லியன் டாலர் கடன் இருக்கிறது. அதில் 5% என்றால் 2 அல்லது 3 டிரில்லியன் டாலர் வட்டியாக மட்டுமே கட்ட வேண்டும். அவர்களின் ஜிடிபியில் 1% வட்டி கட்டுவதற்கே சென்றுவிடும். ஒரு பெரிய வல்லுநர் சொன்னது போல, நீங்களாக உங்கள் பட்ஜெட்டை பேலன்ஸ் செய்யவில்லை என்றால், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் சந்தித்த நிலைமை போல, பாண்ட் மார்க்கெட் உங்களை பேலன்ஸ் பண்ண வைத்துவிடும்.
கடன் பத்திரங்கள்
நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றால்.. அரசு செலவை கம்மி பண்ணனும், வரியை அதிகரிக்க வேண்டும். ஆனால், இது எல்லாமே பங்குச்சந்தைக்கு எதிராகத்தான் போகும். அதனால்தான் சொல்கிறேன், பங்குச்சந்தை என்பது தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்காது. பங்குச்சந்தை சரிய போகிறது என்பதை பாண்ட் மார்க்கெட் இண்டிகேட் செய்கிறது.
அமெரிக்காவின் பாண்ட் ஈல்டே 5% சென்றால், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 2.5% முதல் 3% வரை இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் நமது பாண்ட் ஈல்டு 8.5% போக வேண்டும். அப்படி போனால் அது ரிசர்வ் வங்கி கண்ட்ரோலில் இல்லை என்றுதான் அர்த்தம். இதற்கிடையில் ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடையும்.
பங்குச்சந்தை
பங்குச்சந்தையில் இப்போது டிபன் காபி அளவு, அதாவது சிறிய அளவிலான முதலீடுகளை மட்டுமே செய்ய வேண்டும். பாண்டு ஈல்ட் 6%க்கு போனால் ஒட்டுமொத்த மார்கெட்டும் படுத்துவிடும். மார்கெட் எப்போது சீராகும் என துல்லியமாக யாராலும் சொல்ல முடியாது. சூழ்நிலை மாறும் போது தான் மார்கெட் எழும். ஆனால், சூழ்நிலை மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சவுதி அரேபியாவில் ஆயில் பைப்லைன் பிரச்சனைகள், செங்கடல் ரூட் முடக்கம், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துறைமுகத்தை பிடித்திருப்பது என கச்சா எண்ணெய் சப்ளையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.
அமெரிக்காவில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகிவிட்டது. அங்கே விலைவாசி கபகபவென ஏறுகிறது. ஒரு கேலன் டீசல் 6 டாலரைத் தாண்டிவிட்டது (அதாவது ஒரு லிட்டர் தோராயமாக 150 ரூபாய்). அமெரிக்காவிலேயே 150 ரூபாய் என்றால், இங்கு எவ்வளவு நஷ்டத்தில் விற்கிறார்கள் என்று பாருங்கள். நஷ்டங்களை ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் தான் ஏற்று கொள்கின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்த நஷ்டத்தை அட்ஜெஸ்ட் செய்வதற்காக அவர்கள் இங்கே பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில்லை.
தங்கம் விலை
வேலைவாய்ப்பு அதிகம் உருவாகியுள்ளது. விலைவாசியும் ஏறுகிறது.. இதனால் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை ஏற்றித்தான் ஆக வேண்டும். செப்டம்பர் அல்லது டிசம்பரில் வட்டி விகிதத்தை ஏற்றித்தான் ஆக வேண்டும். அப்படி வட்டி விகிதத்தை ஏற்றினால் தங்கம் விலை சரிய தொடங்கும். வட்டி விகிதம் ஏறினால் தங்கம் விலை 6 முதல் 7% வரை விழ வாய்ப்புள்ளது. ஏற்கனவே தங்கம் சற்று விலை குறைந்துள்ளது, வட்டி ஏற்றினால் இன்னும் குறையும்.
இப்போது ‘லஞ்ச்’ சாப்பிடும் நேரம் (பெரிய முதலீடு) கிடையாது.. இன்னும் இரண்டு வருடம் காத்திருங்கள். அது வரை சின்ன சின்ன முதலீடுகளே போதும். ட்ரம்ப் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. அமெரிக்கா பங்குச்சந்தை 2000 பாயிண்ட் விழுந்தால், இந்திய பங்குச்சந்தை 5000 பாயிண்ட் விழும். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

