(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)
‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு நிறைவேற்றியிருக்கிறது.
“உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதே இதன் நோக்கம்” என்று அரசு கூறுகிறது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தைப் படித்துப்பார்க்கும்போது, தமிழகத்தின் உயர் கல்வியை முழுக்க முழுக்க வணிகமயமாக்குவதையே இது நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்திலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறுவதற்கான வாய்ப்பை இந்தச் சட்டத் திருத்தம் உருவாக்கக்கூடும் என்ற அச்சம் எழுகிறது. எனவே, இந்தச் சட்டம் உண்மையில் யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பான அம்சம், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாவிலேயே இருந்தது என்ற வாதத்தை இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் முன்வைக்கிறார்கள். தற்போதைய திருத்தச் சட்டத்தில் அந்த அம்சம் வெளிப்படையாக இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உயர்கல்வி அமைச்சரும், “அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவது அரசின் நோக்கம் அல்ல” என்று கூறுகிறார். அரசின் நோக்கம் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டத்தின் விதிகள் வேறு ஒரு வாய்ப்பை உருவாக்கினால் என்ன செய்வது?
இதற்கு சென்னை துரைப்பாக்கத்திலுள்ள டி.பி. ஜெயின் கல்லூரி விவகாரத்தை ஒரு முக்கியமான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் கல்லூரியாகச் செயல்பட்ட அந்த நிறுவனம், அரசிடமிருந்து பல்வேறு மானியங்களையும் வசதிகளையும் பெற்றுவந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடனும் அங்கு கட்டடங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு கட்டத்தில், “எங்கள் கல்லூரியில் ஆசிரியர்களை அரசு நியமிக்கவில்லை… அதனால், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை” என்று கூறி, அந்தப் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைக்கப்படைக்கிறோம்” என்று அந்தக் கல்லூரி நிர்வாகம் கூறியது.
இங்கு எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஆசிரியர்கள் தேவைப்பட்டால், அரசு அவர்களை நியமித்திருக்கலாமே? வேறு கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்திருக்கலாமே? அல்லது சிறுபான்மை நிர்வாகமே ஆசிரியர்களைத் தேர்வு செய்து நியமித்து, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்கலாமே? ஆனால், இத்தனை வழிகள் இருந்தும், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மூடப்படும் நிலை ஏன் ஏற்பட்டது?
இன்று அந்த கல்வி நிறுவனம் முழுமையான சுயநிதிக் கல்லூரியாகச் செயல்படுகிறது. நாளை அந்தக் கல்லூரியே மூடப்பட்டு, அதே இடத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டால் என்ன ஆகும்? “முடியாது” என்று சொல்லும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா? இதுதான் எனது முக்கியமான கவலை.