ரவி மோகனின் பிறந்த நாள் செப்-5-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு ரசிகர்களைச் சந்திக்கும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யவிப்படவிருக்கிறது.
இதன் முன்னோட்டமாக கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவிமோகன், “எனது முதல் படமான ‘ஜெயம்’ வெளியான காலத்தில் இருந்து இன்று வரை ரசிகர்கள் காட்டி வரும் மாறாத அன்பும் பாசமும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
அன்று சிறுவர்களாக என்னைப் பார்க்க வந்த ரசிகர்கள், இன்று தங்களது குழந்தைகளுடன் குடும்பமாக வந்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் மீது எப்போதும் அன்பைப் பொழியும் ரசிகர்கள் என் கூடவே இருப்பார்கள் என்று கர்வமாகச் சொல்வேன். தனி ஒருவன் திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா, தற்போது நடிகர் கார்த்தியின் படத்தை இயக்கிக் கொண்டே, 2-ம் பாகத்துக்கான திரைக்கதையையும் எழுதி வருகிறார்.
பணிகள் முடிந்ததும் அதுகுறித்த நல்ல செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனது நடிப்பில் வெளியாகவுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் என் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும். அதற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இதுதவிர ‘ப்ரோ கிளப்’ மற்றும் யோகி பாபுவை வைத்து நான் இயக்கி வரும் ‘அன் ஆர்டினரி மேன்’ ஆகிய படங்களின் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அரசியலுக்கு வர விருப்பமிருக்கிறதா என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.
அதில் ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம். அது தவறில்லை. எனக்கும் அந்த ஆர்வம் வரும்பட்சத்தில் நிச்சயமாக அதுகுறித்து யோசிப்பேன். தேர்வுகள் மட்டுமே மாணவர்களின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. தங்களது கருத்துக்களைச் சரியாக வெளிப்படுத்துவதே மாணவர்களின் உண்மையான வெற்றி” என்றார்.