72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரிகளில் ஒருவராக (Feature Films) நடன இயக்குநர் கலா பங்காற்றியிருக்கிறார். நேற்றைய தினம் தேசிய விருதுகள் அறிவித்தப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களிடையே கலா மாஸ்டர் பேசுகையில், “72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நான் ஒரு ஜூரியாக இருந்திருக்கிறேன் என்று சொல்லும்போதே பெருமையாக இருக்கிறது.
இரண்டாவது முறையாக ஜூரியாக வந்திருக்கிறேன். இந்த முறை தமிழ் படங்களுக்கு நிறைய விருதுகள் கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!
நடிகர் தனுஷின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சான்ஸே இல்லை! “கேப்டன் மில்லர்’ படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, எங்க நடுவர் குழுவில் இருந்த வட இந்திய ஜூரிஸே, ‘இவருக்குக் கண்டிப்பாக ஒரு ஸ்பெஷல் அவார்டு கொடுத்தே ஆக வேண்டும்’ என்று கூறினார்கள். எல்லோரும் விரும்பிச் சொன்னதால், நாங்கள் தனுஷிற்கு ஸ்பெஷல் அவார்டு கொடுத்துள்ளோம்.
‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதும், அவரின் நடிப்புக்காகச் ‘ஸ்பெஷல் ஜூரி அவார்டும்’ கிடைத்திருக்கின்றன. தமிழ் படங்களில் ‘மகாராஜா’ திரைப்படம் பட்டியலில் இருந்தது. அதுபோகக் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த ‘மெய்யழகன்’ போன்ற படங்களும் வந்திருந்தன.