தூத்துக்குடி: தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை கலை – அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 3,92,449 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 75 ஆயிரம் குழந்தைகள் கண்டறியப்பட்டு, குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.22 கோடி யில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 26 ‘தோழி’ தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து வருகின்றன.
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.63 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் இதுவரை 34,987 பள்ளிகள் சேர்க்கப்பட்டு 20 லட்சம் குழந்தைகளும், அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 6,910 குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.