தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | Temperature likely to increase for 3 days in Tamil Nadu

1310366.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து, வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த 11-ம் தேதி மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், திருச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவானது.

இதுகுறித்து கேட்டபோது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அடுத்தடுத்து உருவாகி வட மாநிலங்களை நோக்கி செல்கின்றன. இதனால், அங்கு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. தவிர, வழக்கமாக காற்று வீசும் திசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், வானில் மேகங்கள் உருவாவது குறைந்து, தமிழகத்தில் மழை வாய்ப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும். அதேநேரம், தமிழகத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 4 செ.மீ. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், வெட்டிக்காடு, குருங்குளம், நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 14 (நாளை) முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், நாளை முதல் 16-ம் தேதி வரை 50 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *