தமிழையோ, தமிழ் கலாசாரத்தையோ பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொடக்கூட முடியாது – ராகுல் காந்தியின் 6 வாக்குறுதிகள்

Spread the love

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள் தான் உள்ளன. தேர்தல் பிரசாரத்திற்காக திருவள்ளூரில் உள்ள பொன்னேரிக்கு வந்திருக்கிறார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது…

“பிரதமர் எப்போதெல்லாம் ‘ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மக்கள்’ என்று கூறுகிறாரோ, அப்போதெல்லாம் அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்துகிறார்.

இந்த மண்ணில் பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

பாஜகவின் நோக்கம்

பண்டைய காலத்தில், படைகளைக் கொண்டு போர்கள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது பா.ஜ.கவும் அதை தான் செய்கின்றது. ஆனால், அது ராணுவம் இல்லாத ஒரு போரை நடத்தி வருகிறது.

அவர்கள் தமிழ் மொழி, வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்நாளில் இதனை ஒருபோதும் சாதிக்க முடியாது.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மக்களை மறக்கிறார்கள். ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றின் பெருமையை புரிந்துகொள்ளவில்லை. தமிழ்மக்களுக்கு தமிழ் எவ்வளவு முக்கியம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டை ஆள உதவும் கூட்டாளியை உருவாக்குவது தான் பாஜகவின் நோக்கம்.

எங்களது உறுதி

அமித்ஷா மற்றும் மோடியின் கட்டளைகளைக் கேட்டுச் செயல்படும் பொம்மை முதலமைச்சரை அவர்கள் விரும்புகிறார்கள்.

டொனால்ட் ட்ரம்பிற்கு எப்படி சமரசமான இந்திய பிரதமர் வேண்டுமோ, அதே மாதிரி, டெல்லிக்கும் சமரசமான தமிழ்நாட்டு முதலமைச்சர் வேண்டும்.

அடிப்படையிலேயே பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவில் இருக்கும்… இந்தியா கூட்டணியில் இருக்கும் என்னுடைய சகோதரர்கள் பாஜகவிடம் இருந்து தமிழ்மொழியைக் காப்பதற்கான பணியைச் செய்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் தமிழ் மொழியையோ, கலாசாரத்தையும் தொடக்கூட முடியாது என்கிற உறுதியை நாங்கள் அளிக்கிறோம்.

தேசத்தின் வளர்ச்சி பாதையையே பாஜக முடக்கிய போது, எது உண்மையான சமூக நீதி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பதை தமிழ்நாடு ஒட்டுமொத்த நாட்டிற்கும் காட்டியது.

ஆறு வாக்குறுதிகள்

தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறு வாக்குறுதிகளை வழங்குகிறோம்.

1. பெண்களின் வளர்ச்சியை ஆதரிக்க பெண்களின் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக ரூ.2,000 வரவு வைக்கப்படும்.

2. அதே மாதிரி, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி மக்களுக்கு மாதம் ரூ.2,000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

3. கல்லூரி மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில், அவர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

4. உணவு பாதுகாப்பை உறுதி செய்ய குடும்பங்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும்.

5. பதவியேற்ற 300 நாள்களில் அனைத்து அரசு காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

க்ரூப் சி மற்றும் டி பிரிவில் உள்ளூர் மக்களுக்கு 60 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

6. முதல் முறையாக, சொத்திற்கு உரிமையாளர் ஆகும் பெண்களுக்கு, பதிவு கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *