சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், வெறும் அரசுத் தீர்மானம் என்பது ஆளுநரையோ அல்லது பிற அதிகார அமைப்புகளையோ முழுமையாகக் கட்டுப்படுத்துமா என்பது சந்தேகத்திற்குரியது. தீர்மானம் வேறு, சட்டம் வேறு. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாடுவதை உறுதிசெய்ய அதற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

அரசு கொண்டுவரும் மசோதா மூலமாகச் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றால் மட்டுமே இது நிலையான ஒன்றாக மாறும். அத்தகைய சட்டப்பூர்வப் பாதுகாப்பை அரசு பெறத் தவறினால், ஆளுநர் போன்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ளி, அதை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் எங்கள் உறுப்பினர் வலியுறுத்தியபோது, அரசு தரப்பில் எவ்விதப் பதிலும் கூறப்படாமல் மௌனம் காக்கப்பட்டது. “தீர்மானமே போதுமானது” என்ற சபாநாயகரின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல.