தருமபுரி: தொப்பூரில் பின்னால் வந்த லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து – 4 பேர் பலி

Spread the love

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற லாரி, இருசக்கர வாகனம், ஆம்னி வேன், கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, மற்றும் சங்கரிரியை சேர்ந்த முனியப்பன், தினேஷ் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரை காவல் துறையினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொப்பூர் விபத்து

இந்த விபத்தால் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சேலம் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 டிசம்பர் மாதம் இதே போல், அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *