நீதிபதிகள் கடும் அதிருப்தி
ரோத்தகியின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் எழுப்பிய கேள்விகள்:
“ஏன் ரிட் மனு?: தேர்தல் தொடர்பான விவகாரங்களை “தேர்தல் மனுவாகத்’ (Election Petition) தானே தாக்கல் செய்ய வேண்டும்? அதை விடுத்து சட்டப்பிரிவு 226-ன் கீழ் ரிட் மனுவாக ஏன் தாக்கல் செய்தீர்கள்?”
தேர்தல் ஆணையத்தின் பங்கு: “இந்த ரிட் மனுவை தேர்தல் ஆணையம் எப்படி ஆதரித்தது? இது மிகவும் வியப்பாக இருக்கிறது.”
“அடாவடித்தனம்: இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, உடனடியாகத் தடையுத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது ஒரு ‘அடாவடித்தனமான’ விஷயம்.”
சீனிவாச சேதுபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உயர் நீதிமன்றத்தின் அவசரத்தை விமர்சித்தார்:
“பெரியகருப்பன் சனிக்கிழமை இரவு மனுத் தாக்கல் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமையே உயர் நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. அப்படி என்ன அவசரத் தேவை இந்த உலகத்திற்கு வந்துவிட்டது?” என ஆவேசமாகக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பெரியகருப்பன் தரப்பு:
“நீதிமன்றங்கள் அவசரத்தை உணர்ந்து எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம். யாசின் மாலிக் வழக்கை இதே உச்ச நீதிமன்றம் நள்ளிரவு 2 மணிக்கு விசாரித்திருக்கிறது. அது நீதிமன்றங்களின் வரம்பிற்கு உட்பட்டது” எனப் பதிலடி கொடுத்தனர்.

நீதிபதிகளின் அதிரடி உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்வரும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்:
“சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் 2 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும்.. இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதியின் சட்டமன்ற உறுப்பினர் தகுதி தற்காலிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.