முத்துக்கிருஷ்ண நாயக்கர் ஆட்சிக் காலத்தில் 1605-ம் ஆண்டில் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. அப்போதே ஒரு சிறிய கோயில் அமைத்து அங்கு கோட்டை மாரியம்மன் வணங்கப்பட்டாளாம். ஆரம்பத்தில், மண்ணாலான ஒரு பீடம் மட்டுமே இருந்து. பிற்காலத்தில் பலிபீடமும் சிறிய விக்கிரகமும் அமைத்து வழிபடத் தொடங்கினார்களாம்.
ஹைதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் இந்தக் கோட்டை முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியப் போர்ப் படை பயிற்சிக் களமாக இருந்தது. திப்பு சுல்தான் காலத்தில், இங்கே பயிற்சி வகுப்புகள் நடந்துவந்தன.
தாமரைக்குன்றம், பத்மகிரி, திண்டீச்சரம், நெல்லிவனம் என்றெல்லாம் போற்றப்பட்ட திண்டுக்கல் நகரில் வீற்றிருக்கும் இந்தக் கோட்டை மாரியம்மன், கருவறையில் சுகாசன கோலத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடக்கி, அமர்ந்த கோலத்தில் கோரைப்பற்களுடன் காளியாகவும் அம்மனாகவும் போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களில் உடுக்கை, கத்தி, வேல், அரிவாள், வில், மணி, சூலாயுதம், குங்குமக் கிண்ணம் தாங்கி வீற்றிருக்கிறாள்.

பூமியில் அழுந்திக் காணப்படும் இந்த மாரியம்மனின் விக்கிரகத் திருமேனி, பூமியில் எங்குமே காண முடியாத அபூர்வக் கல்லால் ஆனது என்று அவள் பக்தர்கள் கூறுகிறார்கள். இங்கு விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முனியசாமி, நவகிரக சந்நிதிகள் என பல சந்நிதிகள் உள்ளன. எல்லா அம்மன் கோயில்களிலும் நடப்பதைப் போலவே இங்கும் முளைப்பாரி, பால் குடம் எடுத்தல், அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, மலர்ப் பந்து சாத்துதல், கண் மலர் சாத்துவது, உப்பு-மிளகு கொட்டுவது, தீச்சட்டி சுமப்பது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் ஏந்துவது, மாவிளக்கு வழிபாடு என அனைத்தும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நேர்த்திக்கடனுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். அம்மை வந்துவிட்டால் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி, தீர்த்தம் வாங்கிச் சென்று பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுத்தால், அம்மை விலகிடும் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.