சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் தங்களை திமுக-வில் இணைத்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இங்கே நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையிலே வந்து சேர்ந்திருக்கக்கூடிய நீங்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போ ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.
திமுக-வை பொறுத்த வரை எப்போதுமே வெற்றி, தோல்வி மாறி மாறியே வரும். தோல்வியை கொண்டு ஒருபோதும் துவண்டு விட மாட்டோம். பொதுவாக சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். வேறு கட்சிக்கு செல்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் வைத்துத்தான் செல்வார்கள். அதிலும் ஆளும் கட்சியை நோக்கித்தான் அதிகம் செல்வார்கள்.
ஆனால் இன்று தி.மு.க-வை நோக்கி வருகிறார்கள் என்றால், பதவிக்காகவோ, சொகுசான வாழ்க்கைக்காகவோ யாரும் வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் கூட தற்போது திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்துள்ளதை நான் வரவேற்கிறேன். ஆட்சி முக்கியம் இல்லை, ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் கருணாநிதி எதிர்த்தார். எனவே திமுக-விற்கு எப்போதும் ஆட்சி முக்கியமில்லை. அந்தக் கட்சியினுடைய தலைவர்களே, அந்த கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள்.
நாங்கள் வருகிறபோது எங்கள் கூட்டணி கட்சியினுடைய தலைவர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலினிடத்திலே சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லிவிட்டுச் சொல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், ‘நீங்கள் செல்லுங்கள், உங்களுடைய விருப்பம், உங்களுக்கு இருக்கக்கூடிய ஜனநாயகம், நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலமாக பிஜேபி ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அவர்களை வழி அனுப்பி வைத்தேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.