திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, நர்சிங் கல்லூரி மாணவி சீதாலட்சுமி, கடந்த மாதம் 23-ம் திடீரென இறந்தார். அவரது சாவுக்கு மயக்க மருந்து அதிகமாக கொடுக்கப்பட்டதுதான் காரணம், கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சக நர்சிங் மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, சீதாலட்சுமி மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது.
மாணவிக்கு சிகிச்சையின்போது தடை செய்யப்பட்ட மருந்தை மருத்துவர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த போது பணியில் இருந்த மயக்கவியல் மருத்துவர்கள் இரண்டு பேர் தற்போது வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.