தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடும், மோதலும் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்ற அம்பேத்கர் படிப்பக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். தொடர்ந்து, அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது, சிலை அமைப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே நிலவி வரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இரு தரப்பினரையும் அழைத்து திருமாவளவன் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது இரு தரப்பினரும் திருமாவளவன் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து, திருமாவளவன் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.