திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். தொகுதியில் சில இடங்களில் அவர் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.
அவர் பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடற்கரை கிராமங்கள், இஸ்லாமிய சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இதுவரை தி.மு.க-விற்குச் சாதகமாக கிடைத்து வந்த வாககுகள், தற்போது த.வெ.க பக்கம் திரும்பும் நிலை நிலவுகிறது.
இதனால், தொகுதிக்குள் வாக்காளர்களை சென்டிமென்ட் மூலம் கவர தனது பேரன்களைப் பிரசாரத்தில் களமிறமிறக்கியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மணப்பாடு கிராமப்பகுதியில், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.
அவருடன் இரண்டு பேரன்களான அத்யந்த் கிருஷ்ணா, ஆதவ் கிருஷ்ணா ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அவர்கள், “எங்கள் தாத்தாவிற்கு ஓட்டு போடுங்கள்; அவர் உங்களுக்கு நல்லதே செய்வார்; அவர் கொடுத்த வாக்கினை மீற மாட்டார்” எனப் பேசினர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூவரில் யாருமே அரசியலுக்கு வரவில்லை.

இதனால், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமலும் இருந்தார். தொகுதிக்குள் நிலவும் அதிருப்தியைச் சரி செய்யவும், வரும் காலங்களில் தனது அரசியல் வாரிசுகள் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவிக்கும் வகையிலும், பேரன்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் அண்ணாச்சி என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.